Wednesday, September 15, 2010

உலக நாயகனின் கவிதை

மனித வணக்கம்


தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீக சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!
நீ, என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு.

தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடிப் போனாயோ?

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்ச‌மங்கள் புரியும்வரை.

மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண செளகர்யமே, வாழ்!

மகளே. ஓ மகளே!
நீயும் என் காதலியே
எந்தம்மை போல..
எனைப்பிரி ந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை
காதலித்த கணவனுக்குள் எனைத்
தேடுவாயா?

நண்பா, ஓ நண‌பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தையுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உன‌தம்மணத்தின் விளம்பரங்கள்
மதமென்றும் குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகிவிடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
என் சமகால சக‌வாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து,
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்,
ஆம்.
நாளை உன் வரியில்
நான் தெரிவேன்.

-கமல் ஹாசன்

நன்றி: விகடன் தீபாவளி மலர் - 2003

Tuesday, September 7, 2010

கமலஹாசனின் கவிதைகள்

மீண்டும் உனக்கொரு கடிதம்.

சரியாகச் சொன்னால்
20 வருடங்களுக்குப் பிறகு
மீண்டும் உனக்கொரு காதல் கடிதம்.
உன் விலாசம் எப்படியும் மாறும் என்ற
காரணத்தினாலோ என்னவோ
உனது விலாசத்தை காதலி என்பதோடு
அன்று விஸ்தீரணம் செய்யாது விட்டுவிட்டேன்.
காதலி... மீண்டும் உனக்கொரு கடிதம்.
நான் முன்பு எழுதிய கடிதம்உனக்கல்ல எனினும் இத்துடன்அதையும் இணைத்துள்ளேன்.
காதல் ரிஷிகளின் மூலம் பார்ப்பதுஅனாசாரமாகாது.
பார்த்துப் புரிந்துகொள்.பழைய கடிதத்தின் சொந்தக்காரியிடம்இந்தக் கடிதத்தைக் காண்பிக்க வேண்டியஅவசியமில்லை.
அவளுக்கு ஆர்வமும்இருக்க வாய்ப்பில்லை.
காதல் மாறாதது என்பதுஉண்மை.
ஆள் மாறினாலும்இல்லாள் மாறினாலும்
காதல்மாறுவதில்லை.
கூடி வாழ்வதும் காதலில் கூடுவதும்
இருவேறு நிலைகள்.அவள் என்னவள்
அவன் என்னவன் எனஅறம் என்ற பெயரால்
அடையாளச்சூடு வைக்கும் மிருகத்தனம்
மனிதனுக்கே உரித்தானது.
நமது ஆறாவது உணர்வைபோற்று.
பண்டிதர்கள் மெதுவாகஉறுதியான மற்றஐந்து உணர்வுகளின்உத்வேகம் குறைந்து வருவதைஉணர மறுக்கிறார்கள்.
அந்த மறுப்பில்என் (நம்) காதலும் சிக்குண்டுதவிக்கிறது.
மௌன விரதம் பூண்டவர்கள் சமிக்ஞை செய்து
கவிதையை வைக்கிறார்கள்.
நான் காதலன் கவிஞன் ஆதலால்
காதலால் மீண்டும்உனக்கொரு கடிதம்.
இதில் மறுபடியும் விலாசமில்லாமல்
விட்டிருப்பதுவிபத்தல்ல நீ
விலாசத்தை மாற்றிக்கொண்டே
யிருக்கிறாய் நான் என்ன செய்ய?
அதே நான்தான்,
நீ மட்டும் வேறு!
-கமல்ஹாசன்


உன்னை யாம் தலைமைக்கு உயர்த்தியதால்
நீ எம்மிற் சிறந்தவன் எனப் பொருள் கொள்ளாதே
அப்பொருளை ஏற்கும் பணிவு எமக்கில்லை என உணர்.
எம் மொழி எம் நிறம் என்ற விசாலமற்ற அன்பு காரணமாக,எவ்வழி எனத் தெரியாமலே எமை
நடத்திச் செல்லப் பணிந்தோம் உன்னை.
இக்கடிவாளங்களும், சேணங்களும், எமக்குப் பொருந்தச் செய்யப்பட்டவை அல்ல.அவை எமது நாட்டுத் தயாரிப்பல்ல. எமது அளவல்ல. வேறுமட்டக் குதிரைகளின் அளவு. எமது வாய் சிறிதுஇவ்வமைப்பில், யாம் எக்கணம் நினைப்பினும் தலையை உருவிக் கொண்டோடுவோம்பிழையாகப் பூட்டப்பட்ட எமது கடிவாளத்தில் இருந்து மீண்டு.
வலது வார்பட்டையை இழுத்தால் இன்று இடதுபுறம் திரும்புவோம்ஓர் சிலிர்ப்பில் அகலும் கண்மறைப்பான்கள்.அப்போது தென்படுமே
வெவ்வேறு பாதைகள்!அவற்றில்,
எவற்றிற்கு யாம் பாதசாரிகள்?எமக்கும் தெரியாது
உனக்கும் தெரியாது.
நீ அமர்ந்திருக்கும் பீடத்தின் அசௌகரியம்,
விபத்தல்ல.யாமதை அமைத்ததே அப்படி.
நீ உறங்கிவிடாதிருக்க, ஓரிடம் அமர்ந்து விடாதிருக்க,
யாம் வடித்த பீடமது.
உன்னை அதில் ஏற்றுவதில் யாம் காட்டிய ஆர்வத்தை மிகும்,உன்னை வீழ்த்துவதில் யாம் காட்டப்போவது.
தனித்திருத்தல் விழித்திருத்தல், ஒரு புறமிருக்கட்டும்.
எம்மைப் போல் பசித்தும் இருக்கக் கல்.
நாயகம் எமதா? உனதா?என்ற சந்தேகத்திற்கிடமின்றி,
இது எமது நாயகம்.
இடது வாரை இழுத்துப்பார், வலது புறம் திருப்புவோம்;
இந்த அமைப்பும், எமக்கும் உனக்கும், சாஸ்வதமில்லை;மாறும், ஏதேனும் ஒரு விபத்தின் மூலம்.


தமிழ் மகளுக்கு

தேடித் தேடி மருத்துவம் செய்தும்
மாறாதிந்த சாதி ஜுரம்.
கேடிகளாயிரம் கூட்டணி சேர்ந்தது
வியாதியில் வந்து முடிந்தது காண்

காவியும் நாமமும் குடுமியும் கோஷமும்
கண்டு மயங்கும் மந்தைகளாய்
ஆகிப் போனதில் வந்த விளைவுகள்
சொல்லிப் புரியும் வேளையிலே
ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்
காரியம் கெட்டுப் போனது காண்